Homeஅரசு அறிவிப்புகள்பொங்கல் பரிசு- தி.மலை கலெக்டர் அதிரடி உத்தரவு

பொங்கல் பரிசு- தி.மலை கலெக்டர் அதிரடி உத்தரவு

பொங்கல் பரிசு- தி.மலை கலெக்டர் அதிரடி உத்தரவு
கலெக்டர் சந்தீப் நந்தூரி

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு  விநியோகத்தில் தவறு நடைபெறாமல் தடுக்க 12 கண்காணிப்பு அதிகாரிகளை கலெக்டர் சந்தீப் நந்தூரி நியமித்துள்ளார். இதை தவிர முதன்முறையாக கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு மக்கள் அனைவரும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட வழிவகை செய்யும் வகையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு 1 கிலோ பச்சரிசி¸ 1 கிலோ சர்க்கரை¸ 20 கிராம் உலர் திராட்சை¸ 20 கிராம் முந்திரி¸ 5 கிராம் ஏலக்காய்¸ ஒரு முழுக் கரும்பு¸ துணிப்பை உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை ரூ.2500 ம் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

ரூ.5¸604.84 கோடி ஒதுக்கீடு

2.10 கோடி அரிசி அட்டைதாரர்களுக்கு இந்த பொங்கல் பரிசை வழங்கிட அரசு ரூ.5¸604.84 கோடியை ஒதுக்கியுள்ளது. வருகிற சட்டமன்ற தேர்தலை முன் வைத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்திருந்தாலும் கடந்த பொங்கலுக்கு  ரூ.1000ம்  பொங்கல் பரிசாக வழங்கப்பட்டதை உயர்த்தி ரூ.2500ஆக வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின்  அறிவிப்பு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

See also  டிஎன்பிஎஸ்சி: அரசு மையத்தில் படித்த 20 பேர் தேர்ச்சி

இந்நிலையில் இந்த பொங்கல் பரிசுத் தொகை எந்தவித தடங்கலுமின்றி பயனாளிகளை சென்றடைய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இது சம்மந்தமாக திருவண்ணாமலை கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று வெளிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது¸

200 குடும்ப அட்டை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2500/- அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாமில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் அனைவரும் அந்தந்த நியாய விலைக் கடைகளில் சுழற்சி முறையில் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்கப்படும். 

டோக்கன் விநியோகம் 

முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும்¸ பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும்¸ வழங்கப்படும் நாள்¸ நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு¸ டோக்கன்கள் 26.12.2020 முதல் 30.12.2020 முடிய வீடுதோறும் சென்று நியாய விலைக்கடை பணியாளர்கள் மூலம் வழங்கப்படும். மேலும்¸ முற்பகலில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் பிற்பகலில் வரும்பட்சத்தில் அவர்களுக்கும் பொருட்கள் வழங்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்களுக்கு 13.01.2021 அன்று வழங்கப்படும். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும்.

See also  உதவித் தொகைக்கான மனுக்களை பெற சிறப்பு முகாம்

எந்தவித சிரமமுமின்றி

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ரூ.2500 ஐ குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நாட்களில் அனைத்து நியாய விலைக் கடைகளும் உரிய நேரத்தில் திறக்கப்படும். நடைமுறையில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் விடுதலின்றி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டைதாரர்கள் எவ்வித சிரமமுமின்றி நியாய விலைக் கடைகளுக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம். 

யார் வந்தாலும் 

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். பொங்கல் பரிசு பெறுவதற்கு வருகின்ற வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நிற்க வைக்காமல் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும்¸ ஆண்களுக்கு தனி வரிசையாகவும்¸ பெண்களுக்கு தனி வரிசையாகவும் நின்று பரிசுத் தொகுப்பு பெற்றக் கொள்ளலாம்.

கட்டுப்பாட்டு அறை

பொங்கல் பரிசுத் தொகுப்பு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருட்கள் பெறவேண்டும் மற்றும் முகக்கசவம் அவசியம் அணிந்து வரவேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதில் ஏதேனும் முறைகேடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியரக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04175-233063 அல்லது வட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பின்வரும் கண்காணிப்பு அலுவலர்களின் கைபேசி எண்ணிலும் மற்றும் தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலரின் கைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம்.

See also  வணிகர் நல வாரிய சேர்க்கை கட்டணத்தில் விலக்கு

இவ்வாறு கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். 

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!