ஜவ்வாது மலையில் கோடைவிழா நேற்று தொடங்கி இன்று முடிவடைந்தது. விழாவினை தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்து 18062 பயனாளிகளுக்கு ரூ.132 கோடி மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சி அரங்குகளை தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்த விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது,
அமிர்தி-பரமனந்தல் சாலை அமைக்க முதல் கட்டமாக 200 கோடி முதலமைச்சர் ஒதுக்கினார். அதற்கு வேண்டிய பணிகள் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. உடனே சாலை போட்டு முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால் ஒப்பந்தம் போடலாம் என நினைத்திருந்தேன்.

வெளிநாட்டுக்காரர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்து கன்னியாகுமரிக்கு சுற்றுலா செல்கிற போது கண்ணாடி இழை பாலத்தை பார்த்து குடும்பத்தோடு படம் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் பயணிக்கிறார்கள். இன்றைக்கு இந்தியாவிற்கே தென்பகுதியின் அடையாளம் எது என்று சொன்னால் கன்னியாகுமரியில் இருக்கிற கண்ணாடி இழை பாலம் தான்.
அப்படிப்பட்ட இந்த நெடுஞ்சாலைத்துறை முதலமைச்சரின் நெஞ்சத்தில் இருக்கிற நெருக்கமான துறை. என் சொந்த மாவட்டத்தில் அமிர்தியும் பரமனந்தலையும் இணைக்க வேண்டும் என பல்வேறு நிலையில் தொடர்ந்து ஆய்வு கூட்டத்தை நடத்தினாலும் கூட கடைசியாக இதற்கு முட்டுக்கட்டையாக இருந்தது வனத்துறை.
அளக்கிறோம், மரத்தை கணக்கெடுக்கிறோம் என்றனர். இரண்டு மடங்கு நிலத்தை கொடுக்க வேண்டும் அதையும் நிறைவு செய்தோம். நாங்கள் ஏதோ வட இந்தியாவில் இருக்கிறோம் என்று நினைத்து விட வேண்டாம். வட இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவர் இங்கே வந்து இதை எப்படியும் நடத்தக் கூடாது என்பதிலேயே குறியாக இருந்தார் என்பதை நான் திட்டவட்டமாக சொல்கிறேன்.
இந்த மண்ணின் பெருமை அவருக்கு தெரியவில்லை, மக்களின் பிரச்சினை புரியவில்லை. அவரால் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அரசால் அல்ல. முதலமைச்சர் 200 கோடிக்கு மேல் பணத்தை ஒதுக்கி விட்டார். கலெக்டர் இரண்டு மடங்கு இடத்தை கொடுத்து விட்டார்.
முதலமைச்சர் அமிர்தி-பரமனந்தல் சாலை திட்டம் நடைபெறவில்லையே என என்னை செல்லமாக தட்டினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாவட்ட வன அதிகாரி இருந்திருந்தால் இந்தப் பாதையை போட்டு இருப்பேன், தாய்மொழி தமிழ், இணைப்பு மொழி ஆங்கிலம் என இருமொழியும் தெரியாத ஒருவரை நியமித்து விட்டு நாங்கள் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம், தாய் மொழி தமிழை தெரிந்த ஒருவரை நியமியுங்கள் என்று சொன்னவுடனே சுதாகர் என்பவரை நியமித்திருக்கிறார்.
இது யாருக்காக வைத்த கோரிக்கை? இந்த மலையில் இருக்கிற 250க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்காக வைக்கப்பட்ட கோரிக்கை. பரமனந்தல்-அமர்தி சாலை போடுவதற்கு என்.ஓ.சி தேவை என்று புதிய அதிகாரியிடம் சொல்லியிருக்கிறேன். அதற்கு வேண்டிய பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் ஒப்புதல் பெற்று இந்த சாலை கட்டாயம் அமைத்து தருவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.

அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டிய அதிகாரி பெயர் யோகேஷ் குமார் கார்க் (வயது 33). அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழ்நாடு ஈரநில இயக்கத்தின் உதவி இயக்க இயக்குநராக இருந்த யோகேஷ் குமார் கார்க் 4-3-2024 அன்று திருவண்ணாமலை மாவட்ட வன அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
இவரது உத்தரவின் பேரில் செப்டம்பர் 16-ஆம் தேதி, ஜமுனாமரத்தூர் பட்டரைக்காடு காப்புக் காட்டில் திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரார் ஒருவர் வனத்துறை அனுமதியின்றி அமைத்த சிமெண்ட் சாலையை ஜே.சி.பி. இயந்திரங்களை கொண்டு வனத்துறையினர் இடித்து தள்ளினர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினரை சிறைபிடித்தனர்.
சிமெண்ட் சாலை இடிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது திமுகவிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. அதன்பிறகு அந்த சாலை அமைக்க என்.ஓ.சி வாங்கப்பட்டது.
இதே போல் முன்பு ஊரக வளர்ச்சித்துறையிலும் அதிகாரி ஒருவர் மாற்றப்பட்டார். இவரை குறி வைத்தே அமைச்சர் எ.வ.வேலு, அரசு நிகழ்ச்சிகளில் பாசிட்டிவ் அதிகாரிகள், நெகட்டிவ் அதிகாரிகள் என பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை வேங்கிக்காலில் ஏரி நிரம்பி வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகுந்ததற்கு கலெக்டராக இருந்த கந்தசாமி, ஏரிகரை மீது அமைத்த அறிவியல் பூங்காவே காரணம் என அவர் மீதும் அமைச்சர் எ.வ.வேலு குற்றம் சாட்டியிருந்தார்.



