Homeசெய்திகள்மாவட்ட வளர்ச்சி கூட்டத்திலிருந்து வெளியேறிய அதிகாரிகள்

மாவட்ட வளர்ச்சி கூட்டத்திலிருந்து வெளியேறிய அதிகாரிகள்

திருவண்ணாமலையில் நடந்த மாவட்டத்திற்கான வளர்ச்சி கூட்டத்தில் அதன் தலைவரும், எம்.பியுமான அண்ணாதுரை பேச்சை கேட்காமல் அதிகாரிகள் வெளியேறினர்.

மாவட்ட வளர்ச்சி கூட்டம் 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு கூட்டம் (DISHA) அதன் தலைவர் மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. சட்டமன்ற துணைத் தலைவர் கு.பிச்சாண்டி முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், மாவட்ட வன அலுவலர் அருண்லால், சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), பெ.சு.தி.சரவணன்(கலசபாக்கம்), ஓ.ஜோதி(செய்யார்), மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனிவாசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் துணைத் தலைவர் பாரதி ராமஜெயம், மகளிர் திட்ட இயக்குநர் சையித் சுலைமான், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை ஒன்றியக் குழுத் தலைவர் கலைவாணி கலைமணி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் திட்டங்களின் செயல்பாடு மற்றும் முன்னேற்றம் குறித்து இக்குழு ஆய்வு செய்தது.

நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம்

கிரி எம்.எல்.ஏ:- கிராமங்களில் வில்லேஜ் லெவல் கமிட்டி நிர்வாகிகள் பத்து வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதன் காரணமாக முறைகேடுகள் நடக்கிறது. சதகுப்பம் கிராமத்தில் கிராம குழுவின் தலைவர் நிதி மோசடி செய்துள்ளார். ஆனால் அவரை பதவியில் இருந்து எடுக்க முடியவில்லை. கேட்டால் மாநில குழு தான் முடிவு செய்யும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

நம்ம ஊரு சூப்பரு என்ற திட்டம் குறித்து மக்கள் பிரதிநிதிகளுக்கு ஏதும் தெரியவில்லை. எனவே அது சம்பந்தமாக அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும் மக்களுக்கும் புரிய வைக்க வேண்டும். தண்டராம்பட்டு ஒன்றியம் உள் செக்கடி கீழ் வலசை பகுதிகளில் 14 கிலோ மீட்டர் ரோடு போட ஒரு 14 கோடியை செலவு செய்திருக்கின்றனர் ஆனால் அந்த ரோட்டில் நடந்து போக கூட முடியவில்லை.

See also  லியோ படம்- விதி மீறினால் கடும் நடவடிக்கை

அண்ணாதுரை எம்.பி:- மாவட்ட வளர்ச்சிக்கான மேற்பார்வை குழு நேரடியாக அந்த இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தும்.

சுந்தரபாண்டியன்(புதுப்பாளையம் சேர்மன்):- தரகர்களை வைத்துக்கொண்டு வேளாண்மை அதிகாரிகள் முறைகேடுகளை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக கலெக்டர் விசாரணை நடத்த வேண்டும்.

அண்ணாதுரை எம்.பி:- வேளாண்மை உதவி அலுவலர்கள் கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். அரசு திட்டங்களை ஏஜெண்ட்களின் பெயரில் போட்டு அவர்கள் வியாபாரத்துக்கு பயன்படுத்துகின்றனர்.

சுந்தரபாண்டியன்(புதுப்பாளையம் சேர்மன்):- 15 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளர்கள் ஒரே ஊரில் பணிபுரிந்து வருகிறார்கள். இதன் காரணமாக ஊராட்சி மன்ற தலைவர்களை அவர்கள் மதிப்பதில்லை எனவே மாவட்ட ஆட்சியர் அவர்களை மாறுதல் செய்ய வேண்டும். புதுப்பாளையம் ஒன்றியம் பெரியகுளம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் வருவதில்லை கையெழுத்து மட்டும் போட்டு விட்டு சென்று விடுகிறார் எனவே இது சம்பந்தமாக விசாரணை நடத்த வேண்டும்.

சுகாதார அலுவலர்:- டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் மாற்றப்பட்டுள்ளனர்.

செயலாளர்களை மாற்றம் செய்ய வேண்டும்

சுந்தரபாண்டியன்(புதுப்பாளையம் சேர்மன்):- டெங்கு மஸ்தூர் பணியாளர்களுக்கு ஊராட்சி பொது நிதியிலிருந்து சம்பளம் தருவதால் ஊராட்சிகளுக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே அவர்களுக்கு சுகாதாரத்துறை மூலம் சம்பளம் தரப்பட வேண்டும்.

பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ:- துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை திட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் சேர்க்கப்பட்ட நிலையில் காரியந்தல் ஊராட்சி மட்டும் விடுபட்டுள்ளது இதற்கு காரணமான ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கலசப்பாக்கம் தொகுதி லாடவரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படாத போது அதற்கு பராமரிப்பு நிதி ஒதுக்குவது தேவையற்றது. இதேபோல் படவேடு கூட்டுக் குடிநீர் திட்டமும் செயல்படாமல் உள்ளது.

See also  அரசு பள்ளி ஆசிரியையின் கணவர் வெட்டிக் கொலை

இறுதியாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு தலைவர் அண்ணாதுரை எம்.பி பேச தொடங்கினார். அப்போது அதிகாரிகள் பலர் எம்.பி என்ன சொல்கிறார்? என்பதை கேட்காமல் கூட்டத்திலிருந்து வெளியேறினர். இதனால் கூட்ட அரங்கில் பெரும்பாலான சேர்கள் காலியாக இருந்தன.

அண்ணாதுரை எம்.பி பேசுகையில், 167 கிலோ மீட்டர் சாலை ரூ.106 கோடியில் போடப்படுகிறது இதே போல் 418 கிலோ மீட்டர் சாலை ரூ.300 கோடியில் புதிதாக போடப்பட உள்ளது. இப்பணிகள் முடிவடைந்ததும் தமிழ்நாட்டிலே முதன்மை மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் தேர்வு செய்யப்படும். மாவட்ட மின்துறை குழு கூட்டம் நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மின் சம்பந்தமான கருத்துக்களை இந்த கூட்டத்தில் தெரிவிக்கலாம். இனாம் காரியந்தலில் உள்ள சுங்கச்சாவடி அகற்றக்கோரி நாடாளுமன்றத்தில் பேசி இருக்கிறேன். ஒன்றிய அமைச்சருக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறேன். அரசு திட்டங்கள் பெரும்பாலான மக்களுக்கு தெரிவதில்லை. திட்டங்கள் குறித்து பேனர்களை வைத்து விழிப்புணர்வுவை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் ஆட்சி மன்ற குழுக் கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் அண்ணாதுரை எம்.பி மற்றும் ஆளும் கட்சி எம்.எல்.ஏக்களோடு அதிமுக எம்.எல்.ஏக்களான அக்ரி.கிருஷ்ணமூர்த்தி (போளுர்), சேவூர்.ராமச்சந்திரன் (ஆரணி) ஆகியோரும் பங்கேற்றனர்.

எம்.எல்.ஏ கவனத்திற்கு வருவதில்லை

அக்ரி.கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், அரசு திட்டங்கள் நடைமுறைப்படுத்தும் போது அவை சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு வருவதில்லை. தொகுதியில் என்னென்ன தேவைகள் என்பதை பட்டியலிட்டு வழங்குங்கள் என்று தமிழக முதல்வரே சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பி இருக்கும் நிலையில் அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்களை கலந்து செய்வதில்லை.

See also  மீன் பிரியர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தி

போளுர் ரயில்வே மேம்பாலத்திற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் ஆர்ஜிதம் செய்யாமல் இருப்பதால் நான்கு கிலோமீட்டர் தூரம் மக்கள் நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே உடனடியாக அதற்குரிய இடங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டும். இதேபோல் 10 மேம்பாலங்கள் கட்டும் திட்டமும் நிலுவையில் உள்ளது. கரைப்பூண்டி ஊராட்சிக்கு ஆய்வுக்கு சென்றபோது ஊராட்சி அலுவலகம் பூட்டப்பட்டு இருக்கிறது.

மேலதிகாரிகள் தெரிவித்தும் அலுவலகத்தை திறக்க ஊராட்சி செயலாளர் முன் வரவில்லை. எனவே பி.டி.ஓ, ஊராட்சி செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் ஆய்வுக்குச் செல்லும்போது அதிகாரிகள் வருவதில்லை. பி.டி.ஓ யாருக்கு பயப்படுகிறார் என்று தெரியவில்லை. திருவண்ணாமலை இனாம் காரியந்தல், கண்ணமங்கலம் சுங்கச் சாவடிகளை அகற்ற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் மூலம் கடிதம் அனுப்ப வேண்டும் என்றார்.

கலெக்டர்:- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் உரிய மரியாதையை தர வேண்டும் இதற்கு அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது அதை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும்.

இந்த கூட்டத்திலும் அதிகாரிகள் பலர் பங்கேற்கவில்லை. இதை மேடையில் அமர்ந்திருந்த கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கவனிக்கவில்லை. மாவட்ட வளர்ச்சிக்கான கூட்டத்தில் விட்டால் போதும் என அதிகாரிகள் வெளியேறிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Join us for more Update

YouTube

@agnimurasu

Popular Post

Must Read

error: Content is protected !!