திருவண்ணாமலை மக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதாக சேகர்பாபு கூறியதற்கு உள்ளூர் மக்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்து கொண்டு பேசினார்.
இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கலெக்டர் க.தர்ப்பகராஜ், எஸ்.பி சுதாகர் உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது,
அண்ணாமலையார் கோயிலில் பிரேக் தரிசன முறையை கொண்டு வர இருக்கிறோம். திருக்கோயிலில் தரிசன நேரத்தை நீட்டிக்க இருக்கிறோம். 50 ரூபாய் கட்டணம் 100 ரூபாயாக உயர்த்த இந்த கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம்.
திருச்செந்தூரில் கியூ லைன் வரிசை போன்று இங்கும் அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். 100 ரூபாய் கட்டணத்தில் செல்பவர்களுக்கு இருக்கை, கழிப்பிட வசதி, குடிநீர் வசதியுடன் கோயிலில் நடக்கிற உற்சவங்கள் போன்றவற்றை உட்கார்ந்த இடத்திலிருந்து தொலைக்காட்சியில் பார்க்கிற வசதி ஆகியவற்றை ஏற்படுத்த இருக்கிறோம். 2000 பேர் அமர்கின்ற வகையில் அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
திருக்கோயிலில் தரிசனத்திற்கு ஏற்படும் காலதாமத்தை வெளி மாநிலத்திலிருந்து வருகின்ற பக்தர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து இடங்களிலும் ஒலிபெருக்கி வாயிலாக சொல்லப்படும். கோயிலை சுற்றி அதிக இடங்களில் எல்இடி திரைகளை அமைக்க முடிவு செய்து இருக்கிறோம். வெளி மாநில, வெளிநாடுகளிலிருந்து வருகின்ற பக்தர்களை ஒருங்கிணைக்க மக்கள் தொடர்பு அதிகாரி நியமிக்கப்படுவார்.
பக்தர்கள் அதிக கட்டணம் செலுத்தி விடுதிகளில் தங்குவதை தவிர்க்க கூடுதலாக பக்தர்கள் தங்கும் விடுதி விரைவில் கட்டித் தரப்படும். 20 வருடங்களுக்கு திட்டமிடப்பட்டு ரூ.200 கோடி செலவில் பெருந்திட்ட வரைவு ஒன்றை செயல்படுத்துவதற்கு உண்டான அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து அதற்குண்டான பணிகளையும் இந்த ஆண்டு இறுதிக்குள் துவக்கதற்கான திட்டமிட்டு இருக்கிறோம்.
அறங்காவலர் குழுவை பொறுத்த வரையில் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதலை வழங்கி இருக்கிறது. சட்ட திட்டங்களை வகுத்துள்ளது. அறங்காவலர் குழுவின் காலம் இப்போதுதான் முடிந்துள்ளது. கடந்த முறை அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டதில் சில சர்ச்சைகள் எழுந்து நீதிமன்றம் வரையில் சென்று இருக்கிறது. எனவே முறையாக வருகிற அனைத்து மனுக்களையும் பரிசீலித்து அறங்காவலர் குழுக்களை நீதிமன்றம் வழிகாட்டி இருக்கிற நெறிமுறைகளுக்கு உட்பட்டு நியமிப்போம்.

யாதும் ஊரே யாவரும் கேளிர், உள்ளூர் மக்கள், வெளியூர் மக்கள் என்று பிரிக்காதீர்கள். இங்கே இருக்கின்ற மக்கள் நல்ல உணர்வோடு, நல்ல ஒற்றுமையோடு சுமூகமாக இருக்கிறார்கள். உள்ளூர் மக்கள் எப்போது வந்தாலும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது நிர்வாகத்தின் பொறுப்பு. அர்ச்சகர்களின் பொறுப்பு. அவர்கள் சுபிட்சமாக, சுகமாக இறை தரிசனம் செய்வதற்கு எந்த தடங்கலையும் ஏற்படுத்த மாட்டோம்.
கோயிலுக்கு தேவையான அளவிற்கு பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். கூடுதல் பணியாளர்களை நியமிக்க முதலமைச்சரிடம் அனுமதி வாங்குவோம். மூன்று மாதத்துக்குள் பக்தர்களுக்கு இருக்கிற சிரமங்களை நிவர்த்தி செய்வோம்.
செல்போன்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடிவு செய்திருக்கிறோம். பன்னிரண்டு ஆண்டிற்கு பிறகுதான் தெய்வம் இருக்கிற கருவறை சுத்தம் செய்வதை கேள்விப்பட்டு இருக்கிறோம். தற்போது ஒரு வாரத்திற்கு முன்பாக அம்பாள் சன்னதி கருவறையில் உள்ள கருப்பு படிதல் அனைத்தையும் சுத்தம் செய்து ஒன்றை டன் கருப்பை வெளியேற்றி இருக்கிறோம்.
இந்த திருக்கோயிலுக்கு வெளிநாட்டில் இருந்து வருகிற பக்தர்களும் வருகிறார்கள், பல்வேறு மாநிலத்தில் இருந்தும் வருகிறார்கள். கோயில் பிரகாரம் பரந்து விரிந்து இருக்கிறது. யாராவது தவறிவிட்டால் கண்டுபிடிப்பதற்கு அதிக சிரமங்கள் உண்டாகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டும், சாதக பாதகங்களை ஆராய்ந்தும் மாவட்ட அமைச்சர் நல்ல முடிவை எடுப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஒரு செய்தியாளர், இந்தி திணிப்பை எதிர்க்கும் திமுக திருவண்ணாமலையில் என கேள்வியை முழுமையாக கேட்டு முடிப்பதற்குள் குறுக்கிட்ட அமைச்சர் சேகர்பாபு, ஐயப்பன் கோயில் கேரள இனம் பேசுகிற மக்கள் வாழ்கின்ற திருக்கோயில். 18 படியில் 18 தேவதைகள் குடியிருப்பதாக ஒரு ஐதீகம். அந்த படியின் வாசலிலே பார்த்தால் சரணம் ஐயப்பா என்று தமிழில் எழுதி வைத்திருப்பார்கள். அதற்காக அது தமிழ்நாடாக மாறிவிட்டது என்று அர்த்தமா? எந்த பக்தர்கள் நாளுக்கு நாள் அதிகமாக கூடுகிறார்களோ அவர்கள் அறிந்து கொள்வதற்காக அந்தந்த பாஷைகள் பயன்படுத்துகின்றன. இதில் உள்நோக்கம் இல்லை. எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ், இப்போதும் தமிழ். இதுதான் திராவிட மாடல் ஆட்சியின் நாயகன் தளபதியின் கொள்கை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து திருவண்ணாமலையில் நேற்று அதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தொடர்ந்து இன்று அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு திருவண்ணாமலை கோயிலுக்கு விசிட் செய்தது ஆய்வு கூட்டத்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
மேலும் உள்ளூர் மக்கள் எப்போது வேண்டுமானாலும் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள் என்று அவர் சொன்னதை மறுத்துள்ள உள்ளூர் மக்கள், அண்ணாமலையார் கோயிலில் விஐபிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது, இடைத்தரர்கள் காட்டில்தான் பணமழை, சாதாரண மக்கள் சாமியை தரிசிக்க முடிவதில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். ஆதார் கார்டுடன் வரும் உள்ளூர் மக்களுக்கு தனிவழி ஏற்படுத்தப்படும் என்றும், பாஸ் வழங்கப்படும் என்றும் சொன்னது என்ன ஆனது? எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
வீடியோவை காண…
அண்ணாமலையார் கோயிலில் தரிசன கட்டணம் உயர்வு

LINK:- NEWS THIRUVANNAMALAI


